Tuesday, November 23, 2010

கறி / பொரியல் வகைகள்

1.  உருளை பசலை கறி

தேவையானவை:

*பசலைக்கீரை - 200 கிராம்
*உருளைக்கிழங்கு - கால் கிலோ
*இஞ்சி - சிறிய துண்டு
*பூண்டு - 6 பல்
*மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
*பச்சைமிளகாய் - 2
*கொத்தமல்லித்தழை - சிறிது
*நெய் - 2 மேசைக்கரண்டி
*உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1.  உருளைக்கிழங்கினைத் தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

2.  ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

3.  இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் பச்சைமிளகாயை முழுதாகப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

4.  பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கீரைகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைத் தெளித்து, மூடி வைத்து வேகவிடவும்.

5.  தீயைக் குறைவாக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை சிறிது தூவி இறக்கவும்.

  [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************

2.  ஸ்டஃப்டு வெண்டைக்காய் கறி

தேவையானவை:

*வெண்டைக்காய் - 250 கிராம்
*கடலைமாவு - நான்கு மேசைக்கரண்டி
*துருவிய தேங்காய் - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
*பூண்டு - 2 பல்
*பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
*பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
*தனியாப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*எண்ணெய் - 6 மேசைக்கரண்டி
*சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
*மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
*மிளகாய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1.  வெண்டைக்காய் காம்பை நறுக்கிய பிறகு காயைக் கீறி வைத்துக் கொள்ள வேண்டும். சற்று நீளமாக ஒரு பக்கமாக கீறவும்.

2.  பூண்டு, தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், இவற்றை அரைத்து கடலை மாவுடன் நன்றாகக் கலக்கவும்.

3.  உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு முதலியவற்றையும் சேர்த்து கலந்து விடவும்.

4. வெண்டைக்காய்குள் இக்கலவையை பிளந்துவிடாத படி அடைக்கவும். விதைகள் உள்ளே முற்றியிருந்தால் எடுத்துவிடலாம்.

5.  எண்ணெய் விட்டு வெண்டைக்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். கரகரப்பாக இருக்கும்படியும் எடுக்கலாம்.  

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

************************************************************

3.  வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்


தேவையானவை:

*வாழைக்காய் - 4
*உளுத்தம் பருப்பு - 25 கிராம்
*மிளகாய் - 8
*நெய் - 100 கிராம்
*பெருங்காயம் - சிறிதளவு
*துருவிய தேங்காய் - 150 கிராம்
*கடலைப் பருப்பு - 50 கிராம்
*வேகவைத்த துவரம் பருப்பு - சிறிதளவு
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  வாழைக்காய்களை சுத்தமாகக் கழுவி துடைத்து விட்டு எண்ணெயைத் தடவி, நெருப்பில் காட்டி நன்றாக சுட்டு எடுத்து வைக்கவும்.

2.  வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு வாழைக்காயின் தோலை நீக்கி, ஒரு பாத்திரத்தில் பிசைந்து அதில் உப்பை சேர்க்கவும்.

4.  இப்பொழுது தாளித்து அரைத்த சாமான்களை வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளவும்.

5.  இறுதியில் தேங்காய்த் துருவலையும், வேக வைத்த துவரம் பருப்பையும் வாழைக்காய் பொடியுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

 [சமைக்கும் நேரம் :  25 நிமிடம்
  பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

***********************************************

4.  சேப்பங்கிழங்கு கறி-1

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 200 கிராம்
*புளி - எலுமிச்சை அளவு
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*மிளகாய் - 4
*பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
*உப்பு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கித் தோலை உரித்துக் கொள்ளவும்.

2.  ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுத்துக் கொண்டு அதில் புளியுடன் இரண்டு மேசைக்கரண்டி உப்புச் சேர்த்துப் போட்டு ஊறவைக்கவும்.

3.  வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.

4.  பிறகு அதில் உரித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கினைப் போட்டு, புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும்.

5. புளி நன்கு கொதித்து சுண்டி வரும் சமயம் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்.

6. காய் நன்கு வதங்கி வறுபடவும் வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
 பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

******************************************

5.  சேப்பங்கிழங்கு ரோஸ்டு

தேவையானவை:

*சேப்பங்கிழங்கு - 4 பெரியது
*வெங்காயம் - ஒன்று [விருப்பமானால்]
*பூண்டு - 2 அல்லது 3 பல் [விருப்பமானால்]
*மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
*மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
*தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைக்கு

 தாளிக்க:
*கடுகு - கால் தேக்கரண்டி
*கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - தேவையான அள

செய்முறை:

1.  சேப்பங்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்

2.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.

3.  பின் நறுக்கின வெங்காயம் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

4.  வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும்.

5.  தேவையான அளவு மிளகாய்தூள், தனியாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கிளறவும்

6.  கடாயை மூடி அடுப்பை சிறு தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்

7.  காய் நன்கு சிவந்ததும் உப்பு, காரம் சரி பார்த்து, சுருள கிளறி இறக்கவும்

8.  சுவையான சேப்பங்கிழங்கு பொரியல் தயார். இது, சாம்பார் சாதம், கூட்டு, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

6.  பாகற்காய் ஸ்டஃப் கறி

தேவையானவை:

*பாகற்காய் - 8
*வெங்காய விழுது - ஒரு கப்
*பொட்டுக்கடலை மாவு - கால் கப்
*தயிர் - ஒரு கப்
*எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*புளிக்கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
*இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*கரம்மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
*மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
*உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

1.  பாகற்காய் மேல் தோலினை சீவி விட்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும்.

2.  பாகற்காய் மேல் மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைச்சல் இவற்றை சேர்த்து பிசறி பாகற்காயின் உள்ளே வைத்து நிரப்பவும்.

3.  ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

4.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் வைத்து முழுமையாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.


[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்க
பரிமாறும் அளவு : 8 நபர்களுக்கு]

*************************************************************

7.  உருளைக்கிழங்கு கறி



உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*பெரிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
*பெரிய வெங்காயம் - 2
*நாட்டுத் தக்காளி - 2
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
*முந்திரிப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
*கடுகு - அரைத் தேக்கரண்டி
*நெய் - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1.  கால் கிலோ பெரிய உருளைக்கிழங்கினை அப்படியே முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். வெந்தபின் தோலை உரித்து பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  தக்காளியை பொடியாக நறுக்கி அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத் தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் இவைகளைப் போட்டு தயாராக வைத்துக் கொள்ளவும்.

3.  பெரிய வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அலுமினிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைகரண்டி நல்லெண்ணெயை விட்டு காய விடவும்.

4.  காய்ந்தபின் அரை தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும். பிறகு ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

5.  பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி கலவையை அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

6.  தக்காளி நன்கு வதங்கி தொக்கு மாதிரி ஆனபின்பு அதில் கறிவேப்பிலையை பிய்த்துப் போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கினையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

7.  காயில் உப்பு, காரம் ஒட்டிக்கொண்ட பின் சிறிது நேரம் கிளறி விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் அது உருகி வாசனையாக இருக்கும்.

[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

**************************************************************

8.காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி

காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி


தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 200 கிராம்
*காலிஃபிளவர் - 200 கிராம்
*வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் - ஒன்று
*மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
*மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
*தக்காளி - 4
*பால் - 100 மில்லி
*கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
*உப்பு - தேவைகேற்ப
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  காலிஃபிளவரை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2.  பாதி அளவு தக்காளியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து

4.  பின்னர் சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

5.  பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

6.  உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும்.

 [சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   2 நபர்களுக்கு]

********************************************************************

9.  உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையானவை:

*உருளைக்கிழங்கு - 250 கிராம்
*உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
*வெங்காயம் - 100 கிராம்
*பச்சைமிளகாய் - 3
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*கறிவேப்பிலை - சிறிது
*எண்ணெய் - அரை குழிக்கரண்டி
*உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

2.  பிறகு எடுத்து தோல் உரித்து, உதிர்த்து விட்டு அதனுடன் உப்புத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

3.  வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4.  வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறி இறக்கவும்.


[சமைக்கும் நேரம் : 25 நிமிடம்
பரிமாறும் அளவு:  4 நபர்களுக்கு]        

*********************************************************************

10.  கீரை தயிர் கறி

தேவையானவை:

*கீரை - ஒரு கட்டு
*தயிர் - ஒரு கப்
*கிராம்பு - 3
*பூண்டு - 3
*மிளகாய்வற்றல் - 3
*கறிவேப்பிலை - 2 கொத்து
*வெந்தயம் - சிறிது
*வெங்காயம் - 2
*பச்சைமிளகாய் - 3
*இஞ்சி - சிறிது
*தக்காளி - 2
*மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
*எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
*கடுகு - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஏதேனும் ஒரு கீரை வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். கீரையை கழுவி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.  பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3.  வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு தாளித்து அதில் பூண்டு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வதக்கவும்.

4.  பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிவப்பு நிறம் வரும் வரை வதக்கி அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

5.  இறுதியில் கீரையை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி அதனுடன் தயிர் சேர்த்து மறுபடியும் அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின்னர் அதை எடுத்து பரிமாறவும்


 [சமைக்கும் நேரம் : 25 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு ]

******************************************************************

11.  பலாக்கொட்டைக்கறி

பலாக்கொட்டைக்கறி
தேவையானவை:

*தேங்காய்த் துருவல் - 2 கப்
*பலாக்கொட்டை - கால் கிலோ
*முருங்கைக்காய் - 2
*துவரம்பருப்பு - ஒரு கப்
*பச்சைமிளகாய் - 5
*மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
*மிளகாய்பொடி - ஒரு மேசைக்கரண்டி
*புளி - எலுமிச்சை அளவு
*கொத்தமல்லி விதை - ஒன்றரை மேசைக்கரண்டி
*கடுகு - ஒரு தேக்கரண்டி
*சின்ன வெங்காயம் - 4
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1.  பலாக்கொட்டைகளை தோல் நீக்கிக் கொள்ளவும். தேவையெனில் சற்றுப் பெரியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்.

2.  புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

3.  ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் தேங்காய்த் துருவல், மல்லி விதை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4.  ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு பலாக்கொட்டைகளை அதில் போடவும்.
அதனுடன் துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி பிறகு பாத்திரத்தை மூடி வேகவிடவும்.

5.  மூன்று நிமிடங்களுக்கு பிறகு முருங்கைக்காய் மற்றும் புளிச்சாறு ஆகியவற்றை கல்ந்து கொதிக்கவிடவும்.

6.  ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்துக் கிளறவும்.
முருங்கைக்காய் நன்றாக வேகும் வரை அடுப்பில் வைத்து அவ்வபோது கிளறிக் கொண்டே இருக்கவும்.

7.  வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு அதிலேயே நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

8. தாளித்ததை பலாக்கொட்டை மசாலாவில் கொட்டி கிளறிவிட்டுக் கொள்ளவும்.

9.  சூடாக பரிமாறவும்.



[சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
 பரிமாறும் அளவு :   4 நபர்களுக்கு]

****************************************************************

12.  ஸ்ட்ஃப்டு கத்தரிக்காய் கறி


பிஞ்சு கத்தரிக்காய்

தேவையானவை:

*பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ,
*காய்ந்த மிளகாய் - 10,
*உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி,
*தனியா - 2 மேசைக்கரண்டி,
*பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி,
*பெருங்காயம் - சிறிது,
*புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
*உப்பு - தேவையான அளவு,
*எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

1.  கத்தரிக்காயை நான்காக பிளந்து (காம்பு பக்கம் வெட்டக் கூடாது) தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2.  1 ஸ்பூன் எண்ணெயில் மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா, பொட்டுக்கடலை, பெருங்காயம் சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

3. கத்தரிக்காயை தண்ணீரை வடித்து விட்டு, பொடித்த பொடியை கத்தரிக்காய் உடையாமல் திணித்து வைக்கவும். [மீதி பொடியை தனியே வைக்கவும்.]

4.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் திணித்த கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.
புளியை 1/4 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து அவ்வப்போது தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்தவுடன் மீதி பொடியை தூவி நன்கு கிளறி இறக்கவும்


[சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

*********************************************************
13.  அவியல்

தேவையானவை:

வாழைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் - 1 துண்டு
வெள்ளரிக்காய் - 1 துண்டு
கத்திரிக்காய் - 1
கொத்தவரங்காய் - 10
முருங்கைக்காய் - 1
சேனை - 1 துண்டு
புடலங்காய் - 10 செ.மீ துண்டு
மாங்காய் - 1/2 பாகம்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து

அரைக்க:

தேங்காய் துருவல் - 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய் துண்டு
பச்சைமிளகாய் - 5
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

1.  எல்லா காய்களையும் 2"நீளத்தில் விரலளவு தடிமனில் நறுக்கவும். சேனையை தனியே வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.

2.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து காய்களை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்கவும்.

3.  காய் வெந்தது தண்ணீர் பாதியாக வற்றியதும் வேகவைத்த சேனை அரைத்த கலவை போட்டு 3 நிமிடம் கிளறவும்.

4.  மீதமுள்ள தேங்காய் எண்ணெய் மேலே ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்பு:

மாங்காய் கிடைக்கவில்லையென்றால் காய் வெந்து தேங்காய் கலவை சேர்க்கும் போது தயிர் 2 மேசைக்கரண்டி தயிர் சேர்க்கவும். மாங்காயின் புளிப்பிற்கு ஏற்ப அளவை கூட்ட குறைக்க செய்யலாம். கல்யாண வீடுகளில் வைக்கும் இந்த அவியல் தனி சுவைதான்.

 [சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
 பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு]

**********************************************************

14.  பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையானப்பொருட்கள்:

*பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
*துவரம் பருப்பு - 1/2 கப்
*கடலைப் பருப்பு - 1/2 கப்
*காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
*சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
*பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
*தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
*எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
*கடுகு - 1 டீஸ்பூன்
*கறிவேப்பிலை - சிறிது
*உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

1.  துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக[(மசால் வடைக்கு அரைப்பது போல்] அரைத்து எடுக்கவும்.

3.  அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

4.  நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

5.  ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

6.  பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

7.  இந்த உசிலி மோர்குழம்புடன் சாப்பிடவும்.  மிகச் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

இதேபோல், வாழைப்பூ, கொத்தவரங்காய், கோஸ் வைத்தும்,  உசிலி செய்யலாம். மிக ருசியாக இருக்கும்.


[சமைக்கும் நேரம் : 45 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]

***************************************************************

No comments:

Related Posts with Thumbnails