Tuesday, August 30, 2011

வினாயகச் சதுர்த்தி பண்டிகை

வினாயகச்சதுர்த்தி, இந்த ஆண்டு [2011] - செப்டம்பர் 1ஆம்  நாள் வருகிறது. 
நம் தமிழ் நாட்டில், சிறப்பு உணவில்லாமல் பண்டிகை உண்டா?  அதுவும் கொழுக்கட்டை இல்லாமல் வினாயகச் சதுர்த்தி கொண்டாட முடியுமா?  


வினாயகச் சதுர்த்தி பண்டிகை

எந்த ஒரு நல்ல நிகழ்வுகளுக்கும் நாம் எப்போதும் பிள்ளையார் சுழி போடாமல் 
ஆரம்பிப்பதில்லை, ஏனென்றால் வினாயகன் விக்னேஸ்வரன் ஆமாம் எந்த ஒரு விக்னமும் இல்லாமல் சுபிக்ஷ்மாக நாம் நடத்தும் அனைத்தும் நடக்கவேண்டும் என்று முழுமுதற்கடவுளான வினாயகரை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கும் அனைத்து காரியங்களும் ஜெயமாகும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வினாயகருக்கு மிகவும் பிடித்த அருகம் புல்லால் அர்ச்சனை செய்து 
அவருக்குப் பிடித்த கொழுக்கட்டை போன்ற பல சுவையான உணவுப் பண்டங்களைத் 
தயாரித்து அவருக்கு படைத்துவிட்டு மிக இனிமையாக நம் குடும்பத்தோடு நிறைந்த மனதோடு வினாயக சதுர்த்தியைக் கொண்டாடுவோம் 

நம் தமிழ் நாட்டில், சிறப்பு உணவில்லாமல் பண்டிகை உண்டா?  அதுவும் கொழுக்கட்டை இல்லாமல் வினாயகச் சதுர்த்தி கொண்டாட முடியுமா?  


இவ்வருடமும், சுவைமிக்க கொழுக்கட்டை செய்து, இறைவனை வழிபட்டு, மகிழ்ச்சியுடன் அனைவரோடும் சேர்ந்து இப்.பண்டிகையைக் கொண்டாடுங்கள்.  


இதோ, கொழுக்கட்டை செய்யும் முறை:  


பூரண கொழுக்கட்டை / மோதகம்


தேவையான பொருட்கள்:

*அரிசிமாவு - 2 கப்
*வெல்லம் பொடி செய்தது - 2 கப்
*தேங்காய்த்துருவல் - 2 கப்
*ஏலக்காய் - 4 பொடி செய்தது
*எண்ணை - 2 முதல் 3 டீஸ்பூன்
*உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பூரணம்:

ஒரு பாத்திரத்தில், வெல்லத்தைப்போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வேறொரு பாத்திரத்தில் அதை வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, கெட்டியாகும் வரை, கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் அதில், ஏலப்பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி வைக்கவும்.

மேல் மாவு:

*ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

*4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு கொதிக்க விடவும்.

*கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக (சப்பாத்தி மாவு போல்) பிசைந்துக் கொள்ளவும்.

*விரல்களில் எண்ணைத் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இது மோதகம் எனப்படும். கொழுக்கட்டை என்றால், பூரணத்தை நடுவில் வைத்து, இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்தி விடவும். எல்லா மாவையும், மோதகமாகவோ, கொழுக்கட்டையாகவோ செய்து, இட்லி தட்டில் சிறிது எண்ணையைத் தடவி, அதில் வைத்து 5முதல் 8 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.



குறிப்பு:

கைகளால் மாவை கிண்ணம் போல் செய்யக் கடினமாயிருந்தால், கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தலாம். கடைகளில் கிடைக்கும்

தேங்காய் பூரணத்துடன், பருப்பு பூரணம், எள்ளு பூரணம் ஆகியவற்றையும் செய்யலாம்.

பருப்பு பூரணம்:

தேவையா
ன பொருட்கள்:


*கடலைப்பருப்பு - 1 கப்
*வெல்லம் பொடி செய்தது - 1 கப்
*தேங்காய்த்துருவல் - 3/4 கப்
*ஏலக்காய் - 2

செய்முறை:

கடலைப்பருப்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, ஊறிய நீரை வடித்து விட்டு, நல்லத் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். பருப்பு மிருதுவாக வெந்தவுடன் (குழையக் கூடாது), இறக்கி நீரை வடித்து விட்டு ஆற விடவும்.

பருப்பு சற்று ஆறியவுடன், அத்துடன், வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுத்து, அதை ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் போட்டு அடுப்பிலேற்றவும். நிதானமாத் தீயில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பூரணம் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும்.

எள்ளு பூரணம்:

தேவையான பொருட்கள்:

*வெள்ளை எள் - 1 கப்
*வெல்லம் பொடித்தது - 1 கப்
*நெய் - 1 டேபிள்ஸ்பூன்
*ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியி8ல் போட்டு பொடிக்கவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

Monday, March 14, 2011

காரடையான் நோம்பு அடை

கணவனைக் காக்கும் காரடையான் நோம்பு.  மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு. தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு இது.

மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத் தில் கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு புராண காலத் தொடர்புடையது.

14.3.2011 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம். 

*************


காரடையான் நோம்பு அடை


முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.

வெல்ல அடை


தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
*வெல்லம் (பொடித்தது) 1 கப் 
*ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
*தண்ணீர் 2 கப்

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

2.  ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.


3.  வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.


4.  வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி 


5.  இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.



உப்பு அடை


தேவையானவை:

*வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
*காராமணி 1/4 கப்
*தேங்காய் துண்டுகள் 1/2 கப்
*தண்ணீர் 2 கப்
*பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
*பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

*கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

1.  காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.


2.  ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


3.  பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.


4.  மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்

Thursday, January 13, 2011

இனிப்பு வகைகள் - சர்க்கரைப் பொங்கல்

பொங்கல் என்பது தென்னிந்தியாவில்  உண்ணப்படும் அரிசி கொண்டு செய்யப்படும்  உணவு  வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை உணவாகவும் சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது. உலையில் உள்ள நீரை பொங்கவிட்டு பொங்கல் செய்யப்படுவதானால்,பொங்கல் என்பதைஆகு பெயராகவும் கருதலாம்.

சர்க்கரைப் பொங்கல் 

சர்க்கரைப் பொங்கல் செய்முறை இதோ உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

*பச்சரிசி- 1/2 கிலோ
*பாசிப்பருப்பு – 200 கிராம்
*வெல்லம் – 1 கிலோ
*பால் – 1/2 லிட்டர்
*நெய் – 100 கிராம்
*முந்திரி – 100
*சுக்கு – சிறிது         
*ஏலக்காய் – 10
*தேங்காய் – 1

முதலில் செய்துக்கொள்வது:

1.  அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
2.  பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
3.  ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
4.  முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
5.  தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.

செய்யும் முறை:

1.  ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
2.  பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
3.  அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
4.  நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
5.  அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
6.  அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும். சுவையான சக்கரைப் பொங்கல் தயார்

Tuesday, December 21, 2010

இனிப்பு வகைகள்

திருவாதிரை களி



ஆருத்ரா தரிசனம்.... நம் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது சுவைமிக்க "திருவாதிரைக் களி" தான்! 

திருவாதிரை களி நைவேத்தியம்

திருவாதிரை களி செய்வது ஏன்?

சிவ பெருமான் தம் பக்தரை சோதனை செய்ய வேண்டி, கிழ வேடம் தரித்து அவர் அளித்த களியை உண்டு களித்ததாக ஒரு கதை வழங்கப்படுகிறது. அதனால்தான் திருவாதிரைத் திருநாளில் சிவனுக்கு களி செய்து நைவேத்தியம் செய்கின்றனர். "களி' என்ற சொல்லுக்கு, ஆனந்தம் என்று தானே பொருள். சிவபெருமான் ஆடும் நடனத்தை ஆனந்த நடனம் என்பர். அவரை ஆனந்த நடராஜர் என்று வணங்குவர். உலகங்களையும், நவக்கிரகங்களையும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மகத்தான சக்தி, "நான் ஆடிக் கொண்டு தான், அனைத்தையும் ஆட்டுவிக்க முடியும்!' என்னும் கருத்தின் அடிப்படையில் தான் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.


திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியை, ஏழு காய்கறிக் கூட்டுடன்/குழம்புடன், நைவேத்தியம் செய்து வழிபடுவர். அவ்வாறு செய்தால், ஏழு பிறவிகளிலும் இன்பமே எய்தும் என்பது இப்பண்டிகையின் உட்கருத்து.

திருவாதிரை என்றாலே அன்று செய்யப்படும் 'களி' தான் அனைவர் நினைவிற்கும் வரும்.  இந்த திருவாதிரை களியை என் குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஐடம்.



திருவாதிரை தினத்தை முன்னிட்டு, களி செய்முறையை இங்கே உங்களுக்காக.



தேவையான பொருட்கள்:

*பச்சரிசி - 2 கிண்ணம்
*வெல்லம் [பொடித்தது] - 21/2 கிண்ணம்
*பயிற்றம் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*கடலைப் பருப்பு -1/2 கிண்ணம்[விருப்பப்பட்டால்]
*நெய் - கால் கப்
*முந்திரி - 10
*திராட்சை - 15
*தேங்காய் துருவல் - அரை கப்
*ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

செய்முறை:


1.  தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

2.  வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

3.  பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

4.  ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்

5.  பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்

6.  தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்

7.  வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்

8.  மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்

9.  வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்

10.  வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்

11. திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.  பிறகு வாண்லியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, நன்றாக கிளறவும்.   உதிர்ந்தால் போல் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.  சூடாகப் சாப்பிட்டால் மிகச் சுவையாக  இருக்கும்.  

12.  இதனை வெண்ணையுடனும், 7 தான் குழம்புடன் உண்ண வேண்டும். சுவையோ சுவை !



களி செய்து நடராஜ பெருமானுக்கு 
நைவேத்தியம் 
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பலகாரம் செய்து இறைவனுக்கு படைப்பார்கள். மார்கழி திருவாதிரை அன்று களி செய்து நடராஜ பெருமானுக்கு நைவேத்தியம் செய்வார்கள். அந்த வகையில், இந்த திருவாதிரை களி சிறப்புடையது.

Tuesday, December 14, 2010

வடை வகைகள் -பீட்ரூட் வடை

பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

*பீட்ரூட் - 2
*பெரிய வெங்காயம் - 2
*மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
*மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
*கறிவேப்பிலை - ஒரு கொத்து
*கடலைப் பருப்பு - 250 கிராம்
*உப்பு - ஒரு தேக்கரண்டி
*இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை

1.  பீட்ரூடை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கவும்.

2.. ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் ஊற வைத்த கடலைப் பருப்பு போட்டு தண்ணீர் சேர்த்து ஒன்றிரெண்டாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

3.  .அரைத்த மாவுடன் துருவிய பீட்ரூட், நறுக்கின வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்க்கவும்.

4.  மாவுடன் எல்லாவற்றையும் போட்ட பின்னர் ஒன்றாக கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும். அரைக்கும் போதே மாவை சற்று கெட்டியாக அரைக்கவும்.

5.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து கையில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து வடையாக தட்டி எண்ணெய்யில் போடவும்..

  6.  பிறகு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எண்ணெய் அடங்கியதும் பொரித்து எடுத்து விடவும்.

7.  சூடான பீட்ரூட் வடை தயார். இந்த மாவுடன் முட்டைக்கோஸ், காரட் சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

[சமைக்கும் நேரம் :30 நிமிடம்
பரிமாறும் அளவு :  4 நபர்களுக்கு]

வடை வகைகள் - கோஸ் வடை

கோஸ் வடை


தேவையான பொருட்கள்


*உளுத்தம் பருப்பு-1 கப்
*பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
*இஞ்சி-1 துண்டு
*பச்சை மிளகாய்-2
*கறிவேப்பிலை-சிறிது
*உப்பு-ருசிக்கேற்ப
*எண்ணெய்-தேவையான அளவு.


செய்முறை:

1.  உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2.  பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக
 பிசைந்து கொள்ளவும்..

3.  சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கவும்.
.
4.  வெ‌ங்காய‌த்‌தி‌ற்கு ப‌திலாக கோ‌ஸ் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் வடை அருமையாக இரு‌க்கு‌ம்

[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு].

வடை வகைகள் - வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை

இது ஒரு தஞ்சாவூர் ஸ்பெஸல் ஐடெம்.  என் குடும்பத்தினர் அனைவரும் இந்த வடையை மிக்க விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.


தேவையான பொருட்கள்


*வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
*பெரிய வெங்காயம் - 1
*கடலைப்பருப்பு - அரை கப்
*காய்ந்த மிளகாய் - 12
*சீரகம் - அரை டீஸ்பூன்
*உப்பு - தேவைக்கேற்ப
*எண்ணெய் - வடைபொரிக்கதேவையானஅளவு
*கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது


செய்முறை:

1. வாழைப்பூ‌வி‌ல் வெ‌ள்ளையாக இரு‌க்கு‌ம் ஒரு நரம்பை எடுத்து‌வி‌ட்டு பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

2.  வெங்காயத்தையு‌ம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. கடலை‌ப்பருப்பை ஊறவைத்து, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், ‌சீரக‌ம், உ‌ப்பு, சே‌ர்‌த்து கொரகொர‌ப்பாக அரைத்துக்கொள்ளவும்.

4. பருப்புக் கலவை‌யி‌ல் நறு‌க்‌கிய வாழை‌ப் பூ, வெ‌ங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.

5.வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

6.  ருசியான வாழைப்பூ வடை தயா‌ர்


[சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
 பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு]
Related Posts with Thumbnails